கலஹா, தெல்தோட்டை பிரதேசத்தின் கரகஸ்கட தேசிய பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு கொரோனா தடுப்பூசிகள் செலுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த மாணவனுக்கு ஒரே நேரத்தில் இரண்டு “பைசர் தடுப்பூசிகள்” செலுத்தப்பட்டுள்ளதாக அவரது வகுப்பாசிரியரால் கலஹா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெயர் பதிவு நடவடிக்கையும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையும் ஒரே இடத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் பதிவுக்காக நின்றுக்கொண்டிருந்த போது, இந்த மாணவனுக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், பின்னர் அவருக்கானதடுப்பூசி அட்டையைப் பெறுவதற்கு காத்திருந்த போது, இரண்டாவது தடவையாகவும் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் மாணவன் கூறியுள்ளான்.

தடுப்பூசி அட்டையை எழுதிக்கொண்டிருந்த பெண்ணும் தடுப்பூசியை ஏற்ற வந்த பெண்ணும் தீவிரமாக கதைத்துக் கொண்டே இவ்வாறு தடுப்பூசியை செலுத்தியதாக அந்த மாணவன் மேலும் தெரிவித்துள்ளான். எனினும் அனைவருக்கும் இரண்டு தடுப்பூசிகளே செலுத்தப்படுவதாக நினைத்துக்கொண்டு வெளியே வந்த இந்த மாணவன், தனது சக நண்பர்களிடம் வினவியபோதே, தனக்கு ஏற்பட்ட நிலையை உணர்ந்து ஆசிரியரிடம் தெரிவித்துள்ளான். இதேவேளை மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் இது குறித்து அச்சப்பட வேண்டாம் என்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.










