‘ கோ ஹோம் கோட்டா’ – மொட்டு கட்சியின் முக்கிய புள்ளி வலியுறுத்து

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினரும், வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.

பஸில் ராஜபக்சவின் சகாவான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேனவின் சகோதரரே இவர். எஸ்.எம். சந்திரசேனவுக்கு இம்முறை அமைச்சு பதவி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அநுராதபுரத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்திய எஸ்.எம். ரஞ்சித்,

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால்தான் ஜனாதிபதி வெற்றிபெற்றார்.  எனினும் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் நாளுக்கு நாள் மக்களின் நம்பிக்கையை அவர் சிதைக்க ஆரம்பித்தார். இதுவே தற்போதைய குழப்பமான நிலைமைகளுக்கு காரணம். ” எனவும் சுட்டிக்காட்டினார்.

69 லட்சம் வாக்குகள் கோட்டாபய ராஜபக்சவுக்கு கிடைத்ததாக சிலர் கூறுகின்றனர். அவ்வாறு இல்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது இவர்கள் எவரும் இருக்கவில்லை. அர்ப்பணிப்பால் வெற்றிபெற்றோம்.

நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்றவரின் தூரநோக்கற்ற செயற்பாடுகள் காரணமாக தற்போது நாட்டில் பொருளாதார, அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கி, அது தான் எடுத்த சிறந்த முடிவு என ஜனாதிபதி நினைப்பார் என்றால், அதுவும் விவசாயிகளுக்கு உரத்தை வழங்காது நாட்டுக்கு ஏற்பட்ட அழிவை போன்றதாகவே இருக்கும்.

தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் வலுவிழந்து விட்டன. போராட்டகாரர்களுக்கு கூறுவது தவறு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தோம். போராட்டகாரர்கள் கூறுவது சரி என்பது தற்போது எமக்கு புரிகிறது.” -என்றும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles