நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சாதகமாகப் பயன்படுத்தி கலப்படம் செய்யப்பட்ட தேயிலைத் தூள் சந்தையில் விற்கப்படுவதாக முறைப்பாடு தெரிவிக்கப்படுகிறது.
தேயிலை கழிவுகளை அரைத்து சுண்ணாம்பு கலத்தல் மற்றும் தேயிலை தூளுக்கு சீனி கலந்து இவ்வாறு கலப்படம் செய்வதாக துறைசார்ந்த அனுபவம் பெற்ற நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
தேயிலைத் தூள் உற்பத்தியாவதற்கு முன் தேயிலை கொழுந்து பதப்படுத்தப்படும் போது தேயிலைத் தூளை அதிகமாகவும் கறுப்பு நிறமாக மாற்றுவதற்காகவே இந்த கலப்பட முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
அதேபோன்று தேயிலைத் தூளின் சாயத்தை அதிகரிப்பதற்காக சுண்ணாம்பு கலக்கப்படுவதாகவும் இதனால் தேயிலைத்தூளில் அதிக சாயம் கிடைப்பதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால் நுகர்வோர் நோய் சுகாதார சீர்கேடுகளுக்கு முகங் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படக்கூடும் என தெரிவிக்கின்றனர். இவ்வாறான தொழிற்சாலைகளை இனங்கண்டு அவற்றுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.










