லுணுகலையில் காணாமல்போன சிறுமி கற்குகையில் இருந்து மீட்பு – ஆசாமிகள் இருவரும் சிக்கினர்

லுணுகலை 27 ஆம் கட்டை பகுதியில் கடந்த 3 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த சிறுமி, கற்குகைக்குள் இருந்து இன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  27ஆம் கட்டைப் பகுதியில் 14 வயது சிறுமியொருவர், கடந்த 3 ஆம் திகதி முதல் காணாமல் போனதாக அவரது பெற்றோரினால் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து பொலிஸார் விசாரணை, தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

விசாரணைகளின் பிரகாரம், பல்லேகிருவ பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரும் 58 வயதுடைய லுணுகலைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரும் அதே காலப்பகுதியில் தலைமறைவானமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸாரும், விசேட அதிரடிப்படையிலும் இணைந்து , உடகிருவ கொட்டிகல்கே காட்டுப் பகுதியில் இன்று காலை முதல் தேடுதல் நடத்தினர்.

இதன்போது குறித்த சிறுமியும், சந்தேக நபர்கள் இருவரும் கற்குகையொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

  லுணுகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

ராமு  தனராஜா

Related Articles

Latest Articles