வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை பூனுகல தோட்டத்தை சேர்ந்த மகேந்திரன் துஷ்யந்தன் எனும் மாணவன் உயிரியல் பிரிவில் கேகாலை மாவட்டத்தில் முதலிடத்தை பெற்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.
தரம் 1-13வரை எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் தேசியக் கல்லூரியில் தனது படிப்பை மேற்கொண்டு இரண்டாவது தடவையாக தனிப்பட்ட பரீட்சாத்தியாக தோற்றியே இவர் இச்சாதனையை படைத்துள்ளார். 3 பாடங்களில் A தர சித்தியை பெற்று 2.7134 எனும் வெட்டுப்புள்ளியில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் அகில இலங்கை ரீதியில் 22 வது இடத்தையும் பெற்றுள்ளார்.
கடந்த வருடம் பாடசாலை பரீட்சாத்தியாக புனித மரியாள் பாடசாலை மூலமாக தோற்றி 2A, C சித்தியையும் 1.8003 வெட்டுப்புள்ளியையும் பெற்றிருந்த போதிலும் வைத்தியத்துறைக்கு பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காதது காரணமாக, மீண்டும் இரண்டாவது முறையாக தோற்றி இவர் இச்சாதனையை படைத்துள்ளார். விடாமுயற்சியும், கடின உழைப்பும் இவரின் இந்த வெற்றிக்கு மூலக்காரணமாக இருந்துள்ளது. முதற்தடவையில் குறைவான பெறுபேறுகளை பெற்று தோல்வியை தழுவிய மாணவர்களுக்கு இம்மாணவனின் வெற்றி ஒரு எடுத்துக்காட்டு. கேகாலை போன்ற மிகவும் பின்தங்கிய மாவட்டத்தில் எந்தவித வசதிவாய்ப்புக்களும் இல்லாமல் தமது சுயக்கற்றலில் மூலம் இவ்வாறான சாதனைகளை படைக்கமுடியுமாக இருந்தால் இதுபோன்ற இன்னும் எத்தனையோ மாணவர்கள் திறமையானவர்கள் இருந்தும் வாய்புக்கள் இன்றி வேறு வேறு பிரிவுகளில் உயர்தரத்தை தொடர்கின்றனர். எட்டியாந்தோட்டை புனித மரியாளில் உயர்தரம் கணித, விஞ்ஞானப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அப்பாடசாலைக்கான வளங்களை கல்வித்துறையினரும் அரசியல் தலைமைக்கும் பெற்றுக்கொடுக்கின்ற பொழுது எதிர்காலத்தில் பல துஷ்யந்தன்களை உருவாக்க உருவாக்கமுடியும். சிறந்த பெறுபேறுகளால் கேகாலைக்கு பெருமை சேர்ந்த அம்மாணவனை கேகாலை கல்வி சமூகம் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.
(ரா.கமல்)
