‘ஐ.நா. பாதுகாப்பு சபையில் மேற்குலக நாடுகளுக்கு வாக்களிக்க இலங்கை மறுப்பு’

ஐ.நா. பாதுகாப்புச்சபையில் அங்கத்துவம் பெறுவதற்காக முன்னிலையான மூன்று மேற்குலக  நாடுகளுக்கு வாக்களிப்பதற்கு இலங்கை மறுப்பு தெரிவித்துவிட்டதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில்  நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்கமுடியாது என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவும், நானும் பேரவைக்கு தெளிவாக அறிவித்துவிட்டோம்.அதுமட்டுமல்ல எம்மால் செய்யக்கூடிய விடயங்களை மட்டுமே ஏற்போம் என்ற என்பதையும் கூறிவிட்டோம்.

இந்நிலையில் ஐ.நா. பொதுச்சபைக்கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எமது நாட்டின் மேற்படி கொள்கையை, நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்தார். தேவையற்ற தலையீடுகளுக்கு அடிபணியமாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

இது சிறப்பானதொரு அறிவிப்பாகும். நாடு தொடர்பில் சிந்தித்து முவெடுப்பதற்குரிய தைரியம் அவருக்கு இருக்கின்றது.

அதேவேளை, ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு அங்கத்துவ  நாடுகளை தெரிவுசெய்வதற்கான அண்மையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அங்கத்துவத்தை பெறுவதற்கு மூன்று மேற்குலக நாடுகளும் முன்னிலையாகின. இம்மூன்று நாடுகளுக்கும் எமது வாக்கை பயன்படுத்த முடியாது என்பதை எமது பிரதிநிதி தெளிவாக அறிவித்துவிட்டார்.  இதற்கான ஆலோசனையை ஜனாதிபதி வழங்கியிருந்தார். மேற்படி மூன்று நாடுகளும் இலங்கை தொடர்பில்  கடுமையாக செயற்பட்டுள்ளன.” – என்றார்.

Related Articles

Latest Articles