சமுர்த்தி திட்டங்களுக்கும் QR குறியீடு அறிமுகம்

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான பல்வேறு திட்டங்களுக்கு தகுதியான பெறுநர்கள் மற்றும் குடும்பங்களை அடையாளம் காண அரசாங்கம் QR குறியீட்டை அறிமுகப்படுத்தும் என்று சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் விநியோகத்தில் QR குறியீடு முறை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் சமுர்த்தி, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோய் வாழ்வாதாரத் திட்டங்கள் போன்ற சமூக நலத் திட்டங்களை சீரமைக்க QR குறியீடு முறைமையை பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மிகவும் திறமையான மற்றும் வெளிப்படையான அமைப்பை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமூக நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பவர்களின் விபரங்கள் மற்றும் நலத் திட்டங்கள் குறித்த தகவல்கள், அலுவலர்களிடம் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் கணினிமயமாக்கப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு கியு ஆர் குறியீடு ஒதுக்கப்படும். இந்த செயல்முறை அக்டோபர் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

கிராம அலுவலர் பிரிவு கள அலுவலர்கள் கையடக்கதொலைபேசி ஊடாக விண்ணப்பத்தில் தரவுகளை சேகரித்த பின்னர் விண்ணப்பதாரருக்கு QR குறியீடு அடங்கிய ஆவணம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் சுமார் 3.9 மில்லியன் குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலம் உதவிகளை பெறுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles