“அரச ஊழியர்களுக்குக் கடன் தவணை அடிப்படையில் 20 கிலோ அரிசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
“அரச ஊழியர்களுக்குக் கார் வழங்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது கடனுக்கு அரிசி வழங்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர். அந்த அளவுக்கு அரச ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்” என எதிரணி உறுப்பினர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
“அரச ஊழியர்கள் சிலரே இது பற்றிய யோசனையை முன்வைத்திருந்தனர் என அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கமளித்திருந்தார். அரசாங்கம் என்ற வகையில் நாம் அவ்வாறு எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.
வங்குரோத்தடைந்துள்ள எதிரணியினருக்கு அரசியல் நடத்துவதற்கு வேறு எதுவும் இல்லாததாலேயே, இவ்வாறான போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன” என்றார்.










