ஆற்றில் தவறி வீழ்ந்து 10 வயது சிறுமி உயிரிழப்பு

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல கெமினிதென் தோட்டத்தில், ஆற்றை கடந்து செல்லும் போது, ஆற்றில் தவறி வீழ்ந்து 10 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார் என்று கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (05) பிற்பகல் 3.30 மணியளவில் பிரத்தியக வகுப்புக்கு சென்ற இரண்டு சிறுமிகள், ஆற்றை கடந்து வீடு திரும்பும் போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் கெமினிதென் தோட்டத்தைச் சேர்ந்த யோகராஜா அனுஷா  என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

சிறுமி ஆற்றில் விழுந்ததைக் கண்ட பொதுமக்கள், தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட சிறுமியை மீட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுமி இம்முறை ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்தார் எனவும் தெரியவந்துள்ளது.

Related Articles

Latest Articles