பதுளை மாவட்ட மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பிற்பகல் வேளையில் கடும் மழை பெய்து வருகின்றது.
நேற்று (13) மாலை வேளையில் பெய்த கடும் மழை காரணமாக பதுளை-செங்கலடி வீதியின் ஹொப்டன், அம்பலாங்கொட, பீஸ்ஸ சந்திக்கு அருகில் பாரிய மண்மேடு சரிந்ததன் காரணமாக பசறை-லுனுகலைக்கு இடையிலான போக்குவரத்து காலை வேளையில் தடைப்பட்டது.
இதன் காரணமாக பிபிலை, மட்டக்களப்பு,பதுளை போன்ற நகரங்களுக்கான போக்குவரத்து இவ்வீதியில் தடைப்பட்டிருந்தது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்கள் மற்றும் லுனுகலை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த தடையை சீர்செய்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வந்தனர்.
கடும் மழை காரணமாக பதுளை-செங்கலடி வீதியில் ஆங்காங்கே மண் மேடுகள் சரிந்துள்ளன.
பதுளுஓயா உட்பட ஏனைய கிளை ஆறுகளும், ஓடைகளும் பெருக்கெடுத்துள்ளன.மீதும்பிட்டிய டெமேரியா “பீ” தோட்ட” சீ” பிரிவில் தோட்ட குடியிருப்பின் சமையலறை மீது மண்மேடு சரிந்து சமையலறை முற்றாக சேதமடைந்துள்ளது.
தொடரும் மழை காரணமாக பதுளை மாவட்டத்தில் ஆங்காங்கே சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதயகுமார தெரிவித்தார். மழையுடனான காலநிலை தொடரும் பட்சத்தில் மாவட்டத்தில் அனர்த்தங்கள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.










