இலத்திரனியல் கொள்வனவு கொள்கையை இந்நாட்டில் விரைவில் அறிமுகப்படுத்துவது தொடர்பில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது.
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் நிதி அமைச்சு, தொழிநுட்ப அமைச்சு மற்றும் கணக்காய்வாளர் திணைக்களம் என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நாட்டின் அனைத்து அரச நிறுவனங்களிலும் கொள்வனவு முறையை இலத்திரனியல் மூலம் மேற்கொள்வதன் தேவைக்கமைய பாராளுமன்றம் ஊடாக கொள்கையொன்றை தயாரிப்பதன் அவசியம் தொடர்பில் உப குழுவின் தலைவர் நாமல் இதன்போது சுட்டிக்காட்டினார். அதற்கமைய 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் கபினட் அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கு இலத்திரனியல் கொள்வனவு முறையை அறிமுகப்படுத்தவும், 2025 அளவில் நாட்டின் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இலத்திரனியல் கொள்வனவு முறையை அறிமுகப்படுத்தவும் எடுக்கக்கூடிய நடவடிக்கைள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
