‘குட்டி இங்கிலாந்து’ என விளிக்கப்படும் நுவரெலியா இலங்கையில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளமாக விளங்குகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகின்ற பகுதியாகும்.
எனினும், நுவரெலியா பிரதான நகரில், நுவரெலியா – பதுளை வீதியில் இரண்டு இடங்களில் சிங்கள மொழியில் மாத்திரம் அறிவிப்பு பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் வேண்டுகோளுக்கு அமைய, தூர பிரதேசங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திற்குள் உள்ளே நிறுத்தப்படாமல் நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் பேருந்து நிறுத்துவதற்கு தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது .
எனினும் இவ்விடத்தில் சிங்கள மொழியில் மாத்திரம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிங்கள மொழி தெரியாதவர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் உடனடியாக போக்குவரத்து பொலிஸாரினால் அபராதம் விதிக்கப்பட்டு வருவதாவதனால் சாரதிகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே அரசின் மும்மொழிக் கொள்கைக்கு சம அந்தஸ்து வழங்கி மும்மொழிகளிலும் அறிவிப்பு பலகைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என உரிய அதிகாரிகளுக்கு பொது மக்கள் மற்றும் சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










