கடந்த மே மாதம் 09 ஆம் திகதி அலரி மாளிகையில் ஒன்று கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட சிலர், கோட்டாகோகம போராட்டக்களத்தில் அமைதியாக செயற்பட்டவர்கள் மீது தடியடி நடத்தி, கொடூரமாக தாக்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்வதற்கு உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
தாக்குதலில் பலத்த காயமடைந்த லஹிரு ஷானக்க உள்ளிட்ட போராட்டக்காரர்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
விஜித் மலல்கொட, ஜனக்க டி சில்வா உள்ளிட்ட நீதியரசர்கள் முன்னிலையில் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையை அடுத்த வருடம் ஜூன் மாதம் 22 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு நீதியரசர் குழாம் தீர்மானித்துள்ளது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்டவர்கள் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் கருத்துகளை முன்வைக்குமாறு அறிவித்தல் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி புலஸ்தி ஹேவாமன்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவும் சட்டமா அதிபர் சார்பில் அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி சவீந்திர விக்கிரமவும் ஆஜராகினர்.
