பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவைமீறிய 91 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 23 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 18 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தொடரும் என்றும், இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை சுகாதார கட்டுப்பாட்டுகளுடன் சில வர்த்தக நிலைங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் மாத்திரமே வெளியில் செல்லுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள இடங்களில் மருந்தகங்கள், சுப்பர் மார்க்கட்கள் , மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் மீன் விற்பனை நிலையங்கள் , சதொச விற்பனை நிலையங்கள் என்பன காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
