மட்டக்களப்பு, பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் மற்றும் கருவப்பங்கேணி பிரதேசங்களில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளரையும் இன்னும் ஒரு வியாபாரியையும் 5 கிராம் 450 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (24) இரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றுச் சூழல் மற்றும் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்றிரவு புதூரில் போதைப்பொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டனர்.
அப்போது போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸார் கைதுசெய்தனர்.
அதேவேளை கருவப்பங்கேணி பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தினை நடத்திவரும் உரிமையாளரின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார், அங்கு வியாபாரத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளரை 5 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்தனர்.
இவ்வாறு வெவ்வேறு சம்பவங்களில் கைதுசெய்யப்பட்ட இந்த இருவரும் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.