தொடர்ச்சியான திறமையை வெளிப்படுத்தினால் அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் எதிர்வரும் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட இன்னும் வாய்ப்பு இருப்பதாக இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசனை பயிற்சியாளரான மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
‘இவர்களால் ஏன் முடியாது. யாரும் நீக்கப்படவில்லை. யாருடனும் தேர்வுக் குழுவினருக்குப் பிரச்சினை இருப்பதாக நான் நினைக்கவில்லை. அனைவரும் தமது இருப்பை காட்டி தொடர்ச்சியாக திறமையாக செயற்பட வேண்டும். இது ஒரு முறை மாத்திரமானதாக இருக்க முடியாது’ என்று சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை ஏ அணிக்காக ஆடும் அஞ்சலோ மத்தியூஸ் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 53 பந்துகளில் 4 பௌண்டரிகளுடன் 50 ஓட்டங்களை பெற்றதோடு அந்தப் போட்டியில் இலங்கை ஏ அணி 86 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
‘குறிப்பிட்ட வயதில் மூத்த வீரர் திறமையை வெளிப்படுத்தவில்லை என்றால், அவர்களின் வயது செல்லும் நிலையில் இளம் வீரர்களில் கவனம் செலுத்துவதே நல்லது. ஆனால் மூத்த வீரர்கள் ஓட்டங்களை குவித்து, அவர் தொடர்ச்சியாக திறமையை வெளிப்படுத்தினால், இளம் வீரர்கள் ஒருபக்கம் வளர்ந்து வரும் நிலையில் அவர்கள் அணிக்குத் திரும்புவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை’ என்று மஹேல தெரிவித்தார்.
பிரமோத்ய விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவையும் மஹேல இதன்போது வரவேற்றார்.
‘தற்போதைய தேர்வாளர்கள் கடந்த மாதங்களில் நல்ல அடைவை பெற்றுள்ளனர். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 இல் வெற்றி வீதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
உண்மை என்னவென்றால் இந்த தேர்வாளர்கள் கடுமையாக உழைக்கின்றனர். அவர்கள் உள்ளூர் மட்டப் போட்டிகள் பற்றி தெரிந்து திறமையான இளம் வீரர்களை கண்டறிகின்றனர்’ என்றார்..
மஹேல ஜயவர்தன உறுதி
