தாலிக் கயிற்றால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என சந்தேகிக்கப்படும் 25 வயது இளம் பெண்ணொருவரின் சடலம், புசல்லாவ, சோகம தோட்ட மேல் பிரிவில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட பெண் எல்பொட தோட்டத்தில், கட்டுகித்துல ஜன உதான கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய எஸ். நிரஞ்சலாதேவியென அடையாளம் காணப்பட்டுள்ளார்

குறித்த பெண் முதல் கணவரை பிரிந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே வேறு ஒரு நபரை திருமணம் செய்துள்ளார் எனவும், இருவரும் கொழும்பில் தங்கி வேலை செய்து வந்தனர் எனவும் தெரியவருகின்றது.
சம்பவ தினத்தன்று, எல்பொட கட்டுகித்துலையில் உள்ள பெண்ணின் தாய்வீட்டுக்கு செல்வதற்காக கொழும்பிலிருந்து இருவரும் புஸ்சல்லாவ நகருக்கு வந்துள்ளபோதும் வீட்டுக்கு செல்லவில்லையென விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த பெண்ணின் இரண்டாவது கணவர் தலைமறைவாகியுள்ளார் எனவும், வேறு ஒரு இடத்தில் கொலை செய்யயப்பட்டு இங்கு கொண்டு வந்து போடப்பட்டிருக்கக் கூடுமெனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கம்பளை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி பிரதீப் ரட்ணாயக்க, பொலிஸ் அதிகாரி ரொசான் அமரசிங்க ஆகியோரின் ஆலோசனைக்கமைய புசல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேமகுமார தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கம்பளை நிருபர்
