இரு நாட்டு பிரதமர்கள் இணைந்து கண்டுகளிக்கவுள்ள கிரிக்கெட் போட்டி நாளை

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்கள் இணைந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை கண்டுகளிக்கவுள்ளனர்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை ஆரம்பமாகின்றது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான இது, ஒரு லட்சத்து 32 ஆயிரம் இருக்கை வசதி கொண்டது. . முதல் நாள் ஆட்டத்தை காண ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த டெஸ்ட் போட்டி முதல் நாள் ஆட்டத்தை பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசும் நேரில் பார்க்க உள்ளனர்.இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 2 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக குஜராத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles