” தேர்தலை ஒத்திவைத்து ஆட்சியை இழந்தவர்கள்”

1970 மே 27 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் தலைமையிலான ‘ஐக்கிய முன்னணி’ கூட்டணி அமோக வெற்றியை பதிவுசெய்தது.

இத்தேர்தலில் கூட்டணியாக களமிறங்கிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி 91 ஆசனங்களையும், லங்கா சமசமாஜ கட்சி 19 ஆசனங்களையும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 06 ஆசனங்களையும் கைப்பற்றின.

இதன்மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தோடு அரியணையேறினார் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தற்போதை தலைவர் மஹிந்த ராஜபக்சவின் நாடாளுமன்ற அரசியல் பயணம்கூட இத்தேர்தல் ஊடாகவே ஆரம்பித்தது. பெலியத்த தொகுதியில் களமிறங்கிய அவர் வெற்றிபெற்று, இளம் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சாதனையோடு சபைக்கு வந்தார்.
இத்தேர்தல் வெற்றியின் பின்னர் ஶ்ரீமா அரசு பல மாற்றங்களை – மறுசீரமைப்புகளை செய்தது. குறிப்பாக 1972 இல் முதலாம் குடியரசு யாப்பு உருவாக்கப்பட்டது. இது இலங்கை முழுமையாக சுதந்திரமடைய வழிவகுத்தது.

மூடிய பொருளாதாரக் கொள்கை, பஞ்சம் உள்ளிட்ட காரணங்களால் கூட்டணி அரசு, மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்தது. இதனால் 1975 இல் நடத்த வேண்டிய நாடாளுமன்றத் தேர்தலை ஈராண்டுகளுக்கு இழுத்தடித்தார் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க.

ஆனால் நடந்தது என்ன? 1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தைக்கூட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இழந்தது.

1977 தேர்தல் ஊடாகவே ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். கம்பஹா, பியகம தேர்தல் தொகுதியில் களமிறங்கிய அவர் வெற்றிபெற்றார்.

அரசமைப்பைமீறும் வகையில் இவ்வாறு தேர்தலை ஒத்திவைக்க நடவடிக்கை எடுத்ததால் சிவில் உரிமைகளைக்கூட இழக்க வேண்டிய நிலைமை ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு ஏற்பட்டது. இதனால் 1982 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவால் போட்டியிட முடியாமல் போனது. சுதந்திரக் கட்சியின் சார்பில் H.S.R.B.கொப்பேகடுவ களமிறங்கினார்.

1977 இற்கு பிறகு 1989 இல்தான் பொதுத்தேர்தல் நடைபெற்றது. சர்வஜன வாக்கெடுப்புமூலம் நாடாளுமன்றத்தின் பதவி காலத்தை மேலும் ஒரு தவணைக்கு நீடித்துக்கொண்டார் ஜே.ஆர்.
( இலங்கையில் நடைபெற்ற முதலாவது சர்வஜன வாக்கெடுப்பு. இது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. அதன்பின்னர் இதுவரை சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
சந்திரிக்கா ஆட்சியில் நடத்த முற்பட்டாலும் அது கைவிடப்பட்டது)
ஜே.ஆர். அரசின் இந்த நடவடிக்கை கடும் அதிருப்தி அலைகளை உருவாக்கின. 17 ஆண்டுகால ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைப்பதற்கு இந்த நகர்வு ஏதோவொரு விதத்தில் வழிவகுத்தது. 1994 இல் நடைபெற்ற தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றிபெற்றது.

அதன்பின்னர் சுதந்திரக்கட்சியின் கை ஓங்கியது. 2005 இற்கு பின்னர் அக்கட்சி தொடர் வெற்றிகளை பதிவுசெய்தது.
மஹிந்த ராஜபக்ச தனக்கு சாதகமான நேரங்களில் கட்டங் கட்டமாக உள்ளாட்சிமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தி, தேர்தலை அரசியல் ஆயுதமாக்கினார். ஆனால் 2014 காலப்பகுதியில் நடைபெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தல் மஹிந்த தரப்புக்கு சிவப்பு எச்சரிக்கையாக அமைந்தது. இறுதியில் 2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவுக்கு வீடு செல்ல நேரிட்டது.

நல்லாட்சியின்போது மாகாணசபைத் தேர்தலை மைத்திரி – ரணில் கூட்டணி இழுத்தடித்தது. 2018 இல் நடத்த உள்ளாட்சி தேர்தலில் இதற்கு தக்க பதிலடி கிடைத்தது. மொட்டு கட்சி வெற்றிநடை போட்டது.
(மைத்திரி – ரணில் ஆட்சி கவிழ்வதற்கு மேலும் சில காரணங்களும் உள்ளன. ஆனால் தேர்தலுடன் விளையாடப்போனமையும் பாதக விளைவை ஏற்படுத்தியது.)

ஆக – தேர்தல்களை ஒத்திவைப்பதற்கும், தேர்தலை அரசியல் விளையாட்டு பொருளாக பயன்படுத்த முற்பட்டவர்களும் தோல்வி அடைந்துள்ளனர் – ஏதோ ஒரு வகையில் ஆட்சி அதிகாரத்தை என்பதே வரலாறு.

அந்தவகையில் உள்ளாட்சிசபைத் தேர்தலை இழுத்தடித்து தற்போதைய அரசு ‘ஆறுதல் இன்பத்தை’ அனுபவித்தாலும், தேர்தலொன்று நடைபெறும் சந்தர்ப்பத்தில், அதன் பெறுபேறுகள் மரண வேதனையை தரும் என்பதே கசப்பான உண்மை.

ஆர்.சனத்

Related Articles

Latest Articles