இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவினரின் கோரிக்கையை அடுத்து பதவி விலகும் தனது முடிவை மீள் பரிசீலனை செய்ய இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன இணங்கியுள்ளார்.
நியூசிலாந்தில் அண்மையில் நடைபெற்ற இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் முழுமையாகத் தோல்வி அடைந்ததை அடுத்தே அயர்லாந்துக்கு எதிராக இலங்கையில் நடைபெறவிருக்கும் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை அடுத்து பதவி விலகுவது குறித்து கருணாரத்ன அறிவித்திருந்தார்.
நான்கு ஆண்டுகள் டெஸ்ட் அணித் தலைவராக செயற்பட்ட கருணாரத்ன, எதிர்வரும் புதிய உலக டெஸ்ட் சம்பியன்சிப் பருவத்திற்கு புதிய தலைவர் ஒருவருக்கு பதவியை விட்டுக்கொடுக்கவே அவர் முன்வந்தார். டெஸ்ட் அணியின் உப தலைவர் தனஞ்சய டி சில்வாவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது இராஜினாமாவை தேர்வுக் குழுவினர் ஏற்காத நிலையில் அந்த முடிவை மீளாய்வு செய்யும்படி கோரியுள்ளனர்.
‘அதனை நான் செய்வதாக நான் அவர்களுக்கு கூறினேன்’ என்று வரும் ஏப்ரல் 21ஆம் திகதி தனது 35ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கும் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
‘என்றாலும் அது எவ்வாறு செயற்படும் என்பது பற்றி நான் அவர்களுடன் பேச வேண்டி உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்காக முழு பருவத்திற்கும் நான் செயற்பட விரும்புகிறார்களா அல்லது இந்த ஆண்டு முடியும் வரை இருந்து விட்டு அந்தப் பொறுப்பை கையளிக்க விரும்புகிறார்களா என்று தெரிய வேண்டும். அயர்லாந்து தொடரின் போதும் இதுபற்றி தேர்வாளர்களுடன் நான் மேலும் பேசுவேன்’ என்றும் கருணாரத்ன ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இலங்கை தேசிய அணி குழப்பமான சூழலை சந்தித்திருந்தபோதே 2019 ஆம் ஆண்டு டெஸ்ட் அணித் தலைமைப் பொறுப்பு கருணாரத்னவுக்கு வழங்கப்பட்டது. அவரால் அணியில் ஸ்திரத்தன்மையை கொண்டுவர முடிந்தது. அவர் தனது முதலாவது சுற்றுப்பயணத்திலேயே தென்னாபிரிக்காவை அதன் சொந்த மண்ணில் 2–0 என வைட்வொஷ் செய்தார். துணைக்கண்ட நாடு ஒன்று இந்த சாதனையைப் படைத்த முதல் சந்தர்ப்பமாக அது இருந்தது.
அணியை முன்னிலைப்படுத்திய அவர் தனது துடுப்பாட்டத்தையும் மேம்படுத்திக்கொண்டார். அணித்தலைவராக 26 டெஸ்ட் போட்டிகளில் 2242 ஓட்டங்களைப் பெற்ற அவரது ஓட்ட சராசரி 47.70 ஆக இருந்தது. அவர் பெற்ற 14 டெஸ்ட் சதங்களில் ஆறு அணித்தலைவராக பெற்றவையாகும்.
புதிய அணித்தலைவர் ஒருவருக்கு வழி விடும் வகையிலேயே அவரது முடிவு இருந்தது.
‘முன்னர் நான் கூறியதுபோல், புதிய டெஸ்ட் பருவத்தில் நான் பாதி காலத்தில் செயற்படுவதை விட முழு பருவத்திற்கும் புதிய அணித் தலைவர் ஒருவருக்கு கையளித்தால் சிறந்தது என்று நான் நினைத்தேன். அடுத்த தொடருக்குப் பின்னர் தலைமைப் பொறுப்பை கையளிப்பதற்கே நான் முன்னுரிமை அளித்தேன். ஆனால், தேர்வாளர்கள் கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்கள், நான் அதனை பரிசீலனை செய்யவுள்ளேன்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஏப்ரல் 16ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது.
