லோரன்ஸ் ஐயாவின் வாழ்க்கை பயணம் 1952 – 2023!
பிறப்பு- 1952 ஜனவரி 21.
பிறந்த மண் – தலவாக்கலை ஒலிரூட் தோட்டம்.
தாயின் பெயர் – மரியா ஆரோக்கியம் மேரி.
தந்தையின் பெயர் – அந்தனி.
5 சகோதரர்கள், 5 சகோதரிகள். குடும்பத்தில் ஆறாவதாக பிறந்த குழந்தையே லோரன்ஸ்.
ஆரம்ப கல்வி – ஒலிரூட் தோட்ட பாடசாலை. அதன்பின்னர் சாதாரணதரம்வரை தலவாக்கலை பெட்ரிக் பாடசாலை.
உயர்தரம் – ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி.
பட்டப்படிப்பு – பேராதனைப் பல்கலைக்கழகம்.
அரசியல் பயணம்……
1969 இல் மாணவராக இருந்தபோதே இவருக்கு அரசியல்மீது ஆர்வம் ஏற்பட்டது. தமிழகத்தின் பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைவழி அரசியல் பயணமே இவரின் பார்வையையும் அரசியல் பக்கம் திரும்பியுள்ளது.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுடன் இணைந்து, முதலாளி வர்க்கத்தால் அடிமையாக நடத்தப்பட்ட மலையகத் தமிழர்களுக்காக உரிமைக் குரல் எழுப்பியதுடன், பல புரட்சிகரமான திட்டங்களையும் முன்னெடுத்துள்ளார்.
குறிப்பாக 1969 இல் கம்யூனிஸ் கட்சி நடத்திய மே தினத்தின்போது நவீன காமன் கூத்து என்ற மகுடத்தின்கீழ் இடதுசாரி கொள்கை மக்கள் மயப்படுத்தப்பட்டது. இதில் லோரன்சும் தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.
கீழைக்காற்று இயக்கத்தில் இணைந்து, சமூக விடுதலைக்கான பயணத்தில் ஆயுதப்பயிற்சியும் பெற்றார்.
” நக்கில்ஸ் மலைத்தொடரில்தான் முகாம்கள் அமைத்து பயிற்சிபெற்றோம். இதற்கிடையில் தலைமறைவு வாழ்வும் தொடர்ந்தது. காலபோக்கில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டோம்.
1974 இல் மகஸின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டது. விசாரணை எப்படி நடந்திருக்கும் என சொல்லவேண்டியதில்லை.
தாய், தந்தை ஆகியோர் என்னை பார்வையிட வருவார்கள். காலம் பறந்தது. கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டது. நான் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி இருந்ததால் அங்கு பயிலவும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
பல தரப்புகளினதும் ஆலோசனையின்படி பல்கலைக்கழகம் சென்றேன். திறமையை வெளிப்படுத்தி சிறப்பு சித்தியுடன் பட்டம் பெற்றேன்.
பல்கலைக்கழகம் சென்ற காலத்திலும் மாணவ இயக்கங்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இடதுசாரி மாணவர் சக்தி உட்பட பல அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளேன்.
1976 முதல் 1980 வரை தலவாக்கலை பகுதியில் மலையக தேசியத்தை வலியுறுத்தி பல விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தினேன். இ.தொ.காவின் அரசியல் பிரிவு இருந்தது. எம்மிடம் பணம் இருக்கவில்லை. எனவே, விழிப்புணர்வு கூட்டங்களுக்காக அவர்களின் அலுவலகத்தை பயன்படுத்திகொண்டோம்.
மலையகத் தமிழர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்ட காலப்பகுதியில் நீதிக்காக அமரர். சந்திரசேகரன், காதர், மு.சிவலிங்கம உட்பட பழ தோழர்கள் இணைந்து செயற்பட்டோம். காதர் கைது செய்யப்பட்டார். சிறை தண்டனை வழங்கப்பட்டது. ” என்று என்னுடனான சந்திப்பின்போது கடந்தகால அனுபவங்களை லோரன்ஸ் விவரித்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஊடாக அவரின் அரச பணி ஆரம்பமானது. எனினும், அதில் நீடிக்கவில்லை.
(தொடரும்…….)










