ரதெல்ல தமிழ் பாடசாலை அதிபர் சடலமாக மீட்பு

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுக்கொண்டிருந்த புகையிரதத்தில் ரதெல்ல மற்றும் கிறேட்வெஸ்டன் புகையிரத நிலையங்களுக்கிடையே புகையிரத்தில் மோதுண்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று (11) மாலை மீட்கப்பட்டுள்ளது.

கிறேட்வெஸ்டன் கல்கந்தவத்தை தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கதிர்வேல் சுப்ரமணியம் (வயது 52) ரதெல்ல தமிழ் வித்தியால பாடசாலையின் அதிபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று பாடசாலையில் நடைப்பெற்ற சிரமதான பணிக்கு சென்று மீண்டும் தனது வீட்டுக்கு புகையிரத வீதியூடாக நடந்து வந்துக்கொண்டிருந்தபோதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளாரா அல்லது புகையிரத்தில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டாரா என்பது தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த நபர் தனது வசிப்பிடத்திலிருந்து கிட்டதட்ட 30 வருடங்களுக்கு மேலாக புகையிரத வீதியினூடாகவே நடந்து பாடசாலைக்கு வந்து செல்வதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். சடலம் மரண பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles