போருக்கு பின்னர் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் 2,500 பேர் கைது

இலங்கையில் போருக்கு பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500 ஐ தாண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2009 டிசம்பர் 31 முதல் 2022 டிசம்பர் 31 வரையிலான 13 வருடங்களில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,793 என இலங்கை பொலிஸின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,473 என்பதோடு, 184 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

‘வொட்ச் டோக் டீம்’ உறுப்பினர் யுதன்ஜய விஜேரத்ன, பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் கடந்த மார்ச் 13ஆம் திகதி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

புதிய பொதுச் செயலாளர் கட்டிடத்தின் ஆறாவது மாடி, கொழும்பு 01, இல. 101, சைத்திய வீதி, பூஸா தடுப்பு நிலையம், தங்காலை பழைய சிறைச்சாலை வளாகம், இல. 149 கிருலப்பனை மாவத்தை, கொழும்பு 05, புடானி கெபிடல் கட்டிடம், வவுனியா பொலிஸ் அலுவலக வளாகம், ஓமந்தை அர சமுறிப்பு தடுப்புக்காவல் நிலையம் ஆகிய ஏழு இடங்களில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை பயங்கரவாத விசாரணைப் பிரிவுத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பயங்கரவாதச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் வெளியில் தெரியாத இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகின்றனர் என்பதற்கான நம்பகமான ஆதாரங்களை மனித உரிமை அமைப்புகள் பலமுறை வெளிப்படுத்தியுள்ளன.

சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் (ITJP) மற்றும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் (JDS) மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையில், பொலிஸ், இராணுவம், கடற்படை மற்றும் பல்வேறு துணை இராணுவக் குழுக்களால் நாடு முழுவதும் சுமார் 220 இடங்கள் “சித்திரவதைத் இடங்களாக” பராமரிக்கப்பட்டு வருவதை வரைபடமாக வெளிப்படுத்தியிருந்தன.

குற்றஞ்சாட்டப்பட்ட 44 சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 31 பேர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேநகபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட பின்னர் மீளப் பெறப்பட்டவற்றின் எண்ணிக்கை 10 ஆகும்.

Related Articles

Latest Articles