தேயிலை தொழிற்சாலையை மூடுவதற்கு தோட்ட நிர்வாகம் எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெவரலி தோட்ட தொழிலாளர்கள் இன்று முதல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்துக்குட்பட்ட வெவரலி பிரிவில் உள்ள போட்மோர், வெவரலி , ஆடலி, மோனிங்டன் கீழ் பிரிவு, மேல் பிரிவு ஆகிய தோட்டங்களை சேர்ந்த 650 இற்கு மேற்பட்ட தொழிலாளர்களே இவ்வாறு போராட்டத்தில் குதித்தனர்.
அத்துடன், 100 இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு நடவடிக்கையிலும் இறங்கினர்.
இந்நிலையில் இதொகா, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், தோட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் இடம் பெற்றது.
இதன்போது தொழிற்சாலையை உடனடியாக திறக்குமாறு தோட்ட அதிகாரியிடம் தோட்டம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும், தொழிற்சாலையை சீர் செய்து கொடுத்த பின்னரே திறக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தொழிற்சாலை மீள திறக்கப்படும்வரை தாம் பறிக்கும் கொழுந்தை நிர்வாகம் முறையாக ஏற்க வேண்டும் எனவும், தொழிற்சாலை விரைவில் திறக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு இல்லையேல் மீண்டும் போராட்டம் இடம்பெறும் எனவும் தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.










