” என்னை கொலை செய்வதற்கு முயற்சி இடம்பெறுகின்றது. கொலைக்கான ஒப்பந்தம் தென்னிலங்கையில் உள்ள மூன்று குழுக்களுக்கு கனடாவில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.” – என்று யாழ். சிவில் சமூக செயற்பாட்டாளரான அருண் சித்தார்த் தெரிவித்தார்.
சிங்கள தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” துரையப்பாவினதும், எனதும் படத்தை சமூகவலைத்தளங்களில் பதிவிடுகின்றனர், பிரபாகரன் துப்பாக்கியுடன் இருக்கும் படம் அதற்கு மேல் உள்ளது. அன்று துரோகி துரையப்பாவில் ஆரம்பமான நடவடிக்கை இன்னும் முடியவில்லை என மிரட்டல் விடுக்கப்படுகின்றது.
தொலைபேசிக்கு வெளிநாடுகளில் இருந்து அநாமதேய அழைப்புகள் வருகின்றன.
புலிகளை எதிர்ப்பது பிரச்சினை அல்ல, ஆனால் வெள்ளாளர்களை எதிர்ப்பது உங்களுக்கு பிரச்சினையாக அமையும், உங்களை கொலை செய்வதற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என பிரிட்டனில் உள்ள ஒருவர் குறிப்பிட்டார்.
கனடாவில் இருந்து தெற்கில் உள்ள மூன்று குழுக்களுக்கு இதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது, கவனமாக இருங்கள் எனக் கூறினார்.
யாழில் உள்ள பாதுகாப்பு தரப்பினரும்,எனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டனர். எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறினர். ஆயுதத்துக்கு விண்ணப்பிக்குமாறும் கூறினர். எனக்கு பாதுகாப்பு வேண்டாம், ஆனால் எனது வீட்டுக்கு முன்னால் வேண்டுமானால் சோதனைசாவடி அமைத்துக்கொள்ளுங்கள் என கூறினேன்.
ஒப்பந்தத்தை வழங்கியது யாரென இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பயணங்களின்போது கவனமாக இருக்குமாறு பாதுகாப்பு தரப்பினர் அறிவுறுத்தினர்.” – என்றார்.
