தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோரை தமது அணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என கட்சி தலைவரான மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் சிலர் தயாராகிவருகின்றனர் என தெரியவருகின்றது.
அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள வாரஇதழொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்சவால் மாத்திரமே இந்த இணைப்பை வெற்றிகரமாக செய்ய முடியும் எனவும், இதற்கு தகுதியான ஒரே தலைவர் அவர் எனவும், எனவே, இதற்குரிய நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என மேற்படி எம்.பிக்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர் என தெரியவருகின்றது.
மொட்டு கட்சிக்குள் புதிய தலைமைத்துவம் உருவாகிவருவதாலும், மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த அதிருப்தி நிலை குறைந்துவருவதாக அந்த எம்.பிக்கள் கருதுவதால் கூட்டணியை பலப்படுத்த விமல், கம்மன்பில அவசியம் என கருதுகின்றனர்.
கோட்டாபய ராஜபக்ச ஆட்சிகாலத்தில் அமைச்சரவையில் இருந்து விமல்வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பொதுத்தேர்தலில் இவர்கள் மொட்டு சின்னத்தில் போட்டியிட்டிருந்தாலும் நாடாளுமன்றத்தில் தற்போது சுயாதீனமாக செயற்பட்டுவருகின்றனர்.










