” டயஸ்போராக்களுடன் நெருங்கி செயற்படும் நிறுவனம்தான் சனல் – 4 ஊடகம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்காக அல்ல, தன்னை பிரபல்யப்படுத்திக்கொள்வதற்காகவே அந்நிறுவனம் காணொளிகளை வெளியிட்டுவருகின்றது.” – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
எனினும், சனல் – 4வில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பில் ஆராயப்படும். முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
நீதி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு 29 மாதங்களுக்கு முன்னரே நீதி அமைச்சராக இருந்தபோது பயங்கரவாதம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்திருந்தேன். ஆனால் அரசுக்குள்ளேயே எனக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. உண்மையான பயங்கரவாதி நான்தான் என்றுகூட விமர்சித்தனர். இன ஐக்கியத்தை சீர்குலைப்பதற்கு முற்படுவதாகவும் குறிப்பிட்டனர். இறுதியில் என்ன நடந்தது? உண்மை வென்றது?
எனது கூற்று தொடர்பில் உரிய வகையில் ஆராய்ந்து இருந்தால் தாக்குதலை தடுத்திருக்க முடியும். தகவலை வழங்கியவரையே சுட்டுக்கொல்லும் வகையில்தான் எனக்கு எதிரான நடவடிக்கை அமைத்திருந்தது. ஜனாதிபதி ஆணைக்குழுவும் இவ்விடயத்தை சுட்டிக்காட்டிருந்தது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் சூழ்ச்சி உள்ளது, பிரதான சூத்திரதாரி உள்ளார் என்ற கருத்தை முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராதான் வெளியிட்டார். அதன்பின்னரே அக்கருத்து சமூகமயப்படுத்தப்பட்டது. அவர் சட்டமா அதிபராக இருக்கும்போது எதுவும் கூறாமல், ஓய்வு பெறும் நாளல் இந்த அறிவிப்பை விடுத்தார். தனக்கு அதிகாரம் இருந்த காலத்தில் உண்மையை கண்டறிய அவர் முற்படவில்லை.
அவரிடமிருந்து தகவல்களை பெறுவதற்கு பொலிஸார் வாக்குமூலம் பெறுவதற்கு முற்பட்டாலும் அதற்கு எதிராகவும் தடை உத்தரவு பெறப்படுகின்றது.
சனல் – 4 அல்ல எவர் தகவல் வழங்கினாலும் சர்வதேச ஒத்துழைப்பை பெற்றாவது விசாரணைகளை முன்னெடுக்க தயாராக இருக்கின்றோம்.” – என்றார்.
