” ஜனாதிபதி பதவியை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் நாட்டைவிட்டு ஓடிய கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவார் எனக் கூறப்படுவது நகைச்சுவைத்தனமானதாகும். அவ்வாறு அவர் வந்தாலும் மொட்டு கட்சி அவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்காது.”
– இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியலுக்கு வரவுள்ளார் எனக் கூறப்படுவது தொடர்பிலும், அவ்வாறு அவர் வந்தால் மொட்டு கட்சி ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குமா எனவும் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் எஸ்.எம். சந்திரசேன கூறியவை வருமாறு,
” கோட்டாபய ராஜபக்சவுக்கு 69 லட்சம் வாக்குகள் கிடைக்கப்பெற்றன. அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள வாக்குகளைப் பெற்றுக்கொடுப்பதில் நான் முன்னின்று செயற்பட்டேன். அவருக்கு வழங்க வேண்டிய உச்சபட்ச ஒத்துழைப்பை மொட்டு கட்சி வழங்கியது. பங்காளிக்கட்சிகளும் ஆதரவு வழங்கின.
ஜனாதிபதி பதவியை சரியாக செய்யாது, நாட்டைவிட்டு ஓடியவர் மீண்டும் அரசியலுக்கு வருவார் எனக் கூறப்படுவது நகைச்சுவைத்தனமாகும். அவர் இந்த நிலைக்கு இறங்குவார் என நான் நம்பகில்லை.
நாட்டில் மக்கள் எழுச்சி ஏற்பட்டபோது மக்கள் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்படாதவகையில் அவர் நம்பகரமானமுறையில் வெளியேறினார். அதனை மதிக்கின்றோம். அது நல்லது. அவ்வாறு சென்றுவிட்டு மீண்டும் அரசியலுக்குள்வந்து அவர் செல்லவுள்ள பயணம்தான் என்ன?
நாம் உச்ச பதவியை வழங்கினோம், முழு ஆதரவை பெற்றுக்கொடுத்தோம். 69 லட்சம் பேர் வாக்களித்தனர். எனவே, அந்த நிலைக்கு கோட்டாபய ராஜபக்ச வருவார் என நம்பவில்லை.
கோட்டாபய ராஜபக்ச வருவதற்கு முன்னரே மஹிந்த ராஜபக்ச தலைமையில் உள்ளாட்சிதேர்தலில் நாம் வெற்றிபெற்றுவிட்டோம். எனவே, கோட்டா தனித்து 69 லட்சம் வாக்குகளைப் பெறவில்லை.
கோட்டாபய ராஜபக்ச சிறந்த நிர்வாக அதிகாரி என்பதை ஏற்கின்றோம். ஆனால் ஜனாதிபதி பதவியை அவர் சரிவர செய்யவில்லை.
கோட்டாபய ராஜபக்சவுக்கு மொட்டு கட்சி மீண்டும் வேட்பாளர் வழங்கும் என நான் நம்பவில்லை. மொட்டு கட்சியில் அவர் கேட்பார் என்பது கனவு. வழங்கிய வாய்ப்பை அவர் பயன்படுத்தவில்லை. கோட்டா அரசியலுக்கு வருவார் எனக் கூறப்படுவது கட்டுக்கதையாகக்கூட இருக்கலாம். ” – என்றார்.










