அரசியலுக்காக சில்லறைத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவதை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன மேலும் கூறியவை வருமாறு,
” வடக்கு, கிழக்கில் உள்ள சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் இனவாதத்தை தூண்டி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முற்படுகின்றனர். திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகூட இதன்ஓர் அங்கம்தான்.
திலீபன் நினைவேந்தலுக்காக வாகன பேரணியை நடத்தி நாட்டில் பெரும் குழப்பத்தை தோற்றுவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன். மஹிந்தவின் புண்ணியத்தால் நாட்டில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. யார் வேண்டுமானாலும் எங்கும் பயணிக்ககூடிய அமைதி நிலவுகின்றது. எனவே, பாலில் சாணத்தை கலக்கும் வகையிலான செயலை அவர் செய்துள்ளார். அரசியலுக்காக சில்லறைத்தனமான செயல்களில் ஈடுபடுவதை கஜேந்திரன் நிறுத்த வேண்டும்.” – என்றார்.










