” பண்டாரநாயக்க சிங்கள மொழியை அரச மொழியாக்கியதால்தான் நாட்டில் இனப்போர் வெடித்தது என்ற கருத்தை ஏற்க முடியாது. அவர் அன்று தமிழ் மொழியையும் நிர்வாக மொழியாக்கியதால்தான் பிரபாகரனுக்குகூட கல்வி கிடைத்தது.” – என்று குடியரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு
” அன்று தேர்தலில் கொத்தலாவெல வெற்றிபெற்றிலுந்தாலும் சிங்கள மொழியை அரச மொழி ஆக்கி இருப்பார். பண்டாரநாயக்க அத்தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு சிங்களத்தை அரச மொழியாக்கினார். வடக்கு, கிழக்கில் தமிழ்மொழியை நிர்வாக மொழியாக்கினார்.
இத்திட்டத்தை அவர் உடன் அமுலாக்கவில்லை. 1956 இல் திட்டம் வந்திருந்தாலும் ஐந்தாண்டுகளுக்கு பின்னரே அதாவது 1961 ஜனவரி முதல்தான் அத்திட்டம் நடைமுறைக்கு வந்தது.
எனவே, 1956 இல் சிங்கள மொழி அரச மொழியானது, இதனால் தமிழர்கள் வீழ்ச்சியடைந்தனர் என்ற கருத்தை முழுமையாக ஏற்க முடியாது. ஏனெனில் வடக்கு, கிழக்கில் ஆங்கில மொழியில் கல்வி நடவடிக்கை இடம்பெற்றுவந்த நிலையில், பண்டாரநாயக்கவால்தான் தமிழ் மொழியில் கல்வி பயில முடிந்தது.
சிங்கள மொழியை அரச மொழியாகவும், தமிழை வடக்கு, கிழக்கில் நிர்வாக மொழியாகவும் ஆக்கி இருக்காவிட்டால் நாம் விவசாயிகளின் பிள்ளைகளாக, விவசாயத்தை பார்த்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும். இதனை பலர் மறந்துவிட்டனர்.
பண்டாரநாயக்க சிங்கள மொழியை அரச மொழியாக்கியதால்தான் நாட்டில் இனப்போர் வெடித்தது என்ற கருத்து ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. நாடாளுமன்றத்தில் இன்றுள்ள தமிழ்த் தலைவர்கள், அதேபோல பிரபாகரன் உள்ளிட்டோருக்கு அன்று எடுத்த முடிவால்தான் கல்வி பயில முடிந்தது. ஏனெனில் பண்டாரநாயக்க இத்திட்டத்தை கொண்டுவந்த காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் ஆங்கில மொழியை கதைக்ககூடியவர்கள் 7 வீதமே இருந்தனர். ஏனையே 93 வீதமானோருக்காக எடுக்கப்பட்ட முடிவு அது.” – என்றார்.
