அரசால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிகழ் நிலை காப்பு சட்டமூலம் மீளப்பெறப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,
” மக்களின் கருத்து சுதந்திரத்தையும், ஜனநாயகத்தை இல்லாதொழிப்பதற்கு அரசு தயாராகிவருகின்றது.
பயங்கரவாத தடுப்புச் சட்டமூலத்தின் பிரகாரம் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தால், சிறையில் அடைக்க வாய்ப்பு உள்ளது. நிகழ் நிலை காப்பு சட்டத்தின் ஊடாக இவ்வாறான தண்டனைகளை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது.
அப்பிள், அமேசான், கூகுள், மெட்டா, எக்ஸ், புக்கிங்.காம் போன்றவற்றை உள்ளடக்கிய Asia Internet Coalition இத்திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இவர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் வெளிநாட்டு முதலீடுகள் வீழ்ச்சியடையும்.
நிகழ் நிலை காப்பு சட்டமூலத்தை கொண்டு வந்து இன்று என்ன நடந்துள்ளது என்று சிந்தித்து பார்க்க வேண்டும், ஆசிய இன்டர்நெட் கூட்டமைப்பானது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இவற்றை விரட்டியடுத்து விட்டால் சர்வதேச முதலீட்டை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்?
அரசின் இருப்பை உறுதிப்படுத்தவும், ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் எடுக்கும் முயற்சியே இதுவாகும். இது சர்வாதிகாரமான தவறானதோர் திட்டமாகும் என்பதனால் இதை வாபஸ் பெற வேண்டும். ” – என்றார்.
