” ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை ஒத்திவைப்பதற்கான எந்தவொரு முயற்சிக்கும் தமது கட்சி ஆதரவு வழங்காது.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கூறியவை வருமாறு,
” ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்று தற்சமயம் சமூகத்தில் கருத்தாடல் இடம்பெறுகின்றது. எனவே, ஒரு விடயத்தை தெளிவாக குறிப்பிட்டாக வேண்டும், தேர்தலை ஒத்திவைப்பதற்கு நாம் ஒருபோதும் இணங்கமாட்டோம். கட்சியின் உறுதியான நிலைப்பாடு இதுதான், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அல்லது அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். ஏனெனில் தமக்கான ஆட்சி, பிரதிநிதித்துவத்தை தெரிவுசெய்யும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். எனவே, தேர்தலை ஒத்திவைப்பதற்கு எந்தவிதத்திலும் எமது கட்சி செயற்படாது, ஒத்துழைப்பு வழங்காது.” – என்றார்.
