இஸ்ரேல் – பாலஸ்தீனம் மோதல் – ஐ.நா. தலையீட்டைக்கோரி நாடாளுமன்றில் இன்று விவாதம்

இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண ஐ.நா. உடனடியாக தலையிடுமாறுகோரி இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (19) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டது என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

இதற்கு அமைய இன்று வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்காது மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரையும் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்த இங்கு தீர்மானிக்கப்பட்டது.

ஆளும் கட்சி எதிர்க்கட்சியினரின் பொதுவான இணக்கப்பாட்டுடன் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணைக்கு அமைய விவாதம் நடத்தப்படும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதற்கான பிரேரணையை முன்மொழிய, ஆளும் கட்சியின் சார்பில் இது வழிமொழியப்படும் என செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு உடனடி போர் நிறுத்தத்தை அறிவிக்க அனைத்து தரப்பினரையும் கோர வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இந்த யுத்த நிலைமை சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறும் வகையில் அமைந்திருப்பதுடன், இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், இலட்சக்கணக்கான மக்கள் காயமடைந்து இடம்பெயர்ந்துள்ளனர், பெருமளவிலான இலங்கையர்கள் மத்திய கிழக்கில் பணிபுரிகின்றமை, உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட விளைவுகள் ஏற்பட்டிருப்பதால் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி விவாதம் நடத்தப்படுகிறது.

Related Articles

Latest Articles