” வடக்கு ஆயுதக்குழுவால்கூட (புலிகள்) செய்ய முடியாமல்போன விடயத்தை இளைஞர்கள் ‘ஸ்மார்ட்’ போன் ஊடாக செய்து காட்டினார். இதற்கு அஞ்சியே சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசு முயற்சிக்கின்றது.” – என்று குடியரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியே ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் விரட்டியடிக்கப்பட்டனர். அதனால்தான் சமூகவலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசு முயற்சிக்கின்றது. ஆயுதமேந்தி 71, 87 மற்றும் 89 கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள், வடக்கில் ஆயுதம் ஏந்தியவர்களுக்கு ஜனாதிபதியை கொலை செய்ய முடிந்தாலும், ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியாமல்போனது. ஜனாதிபதிகளை விரட்ட முடியாமல்போனது. ஜனாதிபதிகளை பதவி விலக வைக்க முடியாமல்போனது. ஆனால் ஆயுதம் ஏந்தாமல் ‘ஸ்மார்’ போன் ஊடாகவே இளைஞர்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர். எனவேதான் அந்த ஸ்மார்ட் போனை மௌனிக்க வைப்பதற்கு முயற்சிக்கின்றனர்.
உலகில் டிஜிட்டல் சேவையில் வரி அறவிடாத 6 நாடுகளில் இலங்கையும் ஒன்று. சர்வதேச உடன்படிக்கையின் பிரகாரம் 15 வீத வரியை அறிவிடலாம். இதனைசெய்யாமல் வைத்தியர்கள், பொறியியலாளர்களிடம் வரி அறவிடபோய் அவர்கள் நாட்டைவிட்டு செல்லும்நிலை காணப்படுகின்றது. இந்த வரியை அறிவிடலாம். அதேபோல குறித்த நிறுவனங்களுடன் (சமூகவலைத்தள) புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை ஏற்படுத்தலாம். போலித்தகவல்கள் பரவுவதை தடுத்தல், வன்முறையை தூண்டுதல் போன்றவற்றை தடுப்பதற்கு நிறுவனங்களுடன் முதலில் புரிந்துணர்வுக்கு வர வேண்டும். இதனை பொலிஸ் அமைச்சருக்கோ, ஜனாதிபதியால் நியமிக்கப்படும் குழுவுக்கோ செய்ய முடியாது. கடந்த காலங்களில் ஐசிபீர், பயங்கரவாத தடைச்சட்டம் என்பன தவறாக பயன்படுத்தப்பட்டன. எனவே, நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு நாம் எதிர்ப்பு.” – என்றார்.
