ராஜபக்ச நிறுவனத்தின் விற்பனை முகாமையாளரே ரணில் – சஜித் அணி சீற்றம்

” அம்பாந்தோட்டை ராஜபக்ச விற்பனை நிறுவனமே நாட்டை ஆள்கின்றது எனவும், அதன் விற்பனை முகாமையாளராகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டுவருகின்றார்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

” நாட்டில் வாழ்வதற்கான உரிமை இல்லாமல் ஆக்கப்பட்டுவருகின்றது. மந்தபோசனை மட்டம் அதிகரித்துவருகின்றது. தரம் குறைவான மருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. இவ்வாறு எல்லா துறைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன.
மின் கட்டணம் வானளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வருடம் இரு மாதத்துக்குள் மின் கட்டணம் 400 வீதத்தால் அதிகரித்துள்ளது. நாட்டில் எவ்வாறு தொழிற்சாலைகள் செயற்பட முடியும், மக்கள் வாழ முடியும்?

மின் கட்டணம், தண்ணீர் கட்டணம், பிள்ளைகளுக்கான பாடசாலை வேன் கட்டணம், போக்குவரத்து செலவு என்பவற்றை செலுத்திமுடித்த பின்னர் உண்பதற்கு உணவு வாங்க பணம் மிஞ்சாத நிலையே காணப்படுகின்றது. அரச ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களின் நிலையே இது. இப்படியான நிலைக்கு நாட்டை தள்ளி நாசமாக்கியுள்ளனர்.

1800 காலப்பகுதியில் கிழக்கிந்திய கம்பனி இந்த நாட்டை நிர்வகித்ததுபோல, ‘அம்பாந்தோட்டை ராஜபக்ச விற்பனை கம்பனியே’ இன்று நாட்டை ஆள்கின்றது. அந்த நிறுவனத்தின் விற்பனை முகாமையாளர்தான் ரணில். விற்பனை முகாமையாளர் ‘ரை’ கட்டிக்கொண்டுதான் வருவார். அதேபோல்தான் ‘ரை’ கட்டிக்கொண்டு உலக நாடுகளுக்கு சென்று ரணில் கையேந்திவருகின்றார். கடன் வாங்குவதுதான் இவர்களின் திட்டம்.” – என்றார்.

Related Articles

Latest Articles