” மக்கள் எதிர்பலையை திசை திருப்பவே சுகாதார அமைச்சு பதவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இந்த கண்கட்டி வித்தைக்கு ஏமாறக்கூடாது. இந்த அரசு முழுமையாக மாற வேண்டும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தலையிடிக்கு தலையணையை மாற்றும் கதையாகவே அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெற்றுள்ளது. இதெல்லாம் கண்கட்டி வித்தையாகும். அரசுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில், இதோ சுகாதார அமைச்சை மாற்றிவிட்டோம் எனக் காண்பித்து அந்த எதிர்ப்பலையை திசை திருப்புவதற்கான முயற்சியும் இடம்பெறுகின்றது. தீர்வு இது அல்ல. இந்த அரசு முழுமையாக மாற வேண்டும். அதற்காக தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” – என்றார்.










