” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பதவியை கைப்பற்றுவதற்கு சாணக்கியன் முயற்சிக்கின்றார். அதனால்தான் வடக்க, கிழக்கில் கூட்டமைப்பின் அரசியல் இருப்பை தக்கவைக்க தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றார். இதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் துணை நிற்கின்றார்.” – என்று அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மட்டக்களப்பில் வாழும் சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சாணக்கியன் நாடாளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் கருத்துகளை வெளியிட்டுவருகின்றார். திவுலபதான பகுதியில் உள்ள விவசாயிகளை அங்கிருந்து விரட்டுவதற்கு முற்படுகின்றார். எமது அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன. எனவேதான் எமக்கு நீதிகோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம். பொலிஸ்மா அதிபரிடம் முறையிடவும் உத்தேசித்துள்ளோம்.
சிங்கள மக்களின் விவசாய நிலத்தை, மாடுகளுக்காக சாணக்கியன் கோருகின்றார். தமிழ் டயஸ்போராக்களால் வழிநடத்தப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வடக்க, கிழக்கில் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளவே சாணக்கியன் முயற்சிக்கின்றார். மாறாக இது அப்பாவி தமிழ், சிங்கள மக்களுக்கிடையிலான பிரச்சினை அல்ல.
சிங்கள மக்கள் அவர்களுக்குரிய பாரம்பரிய இடத்தில் விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். விகாரை அமைப்பதற்கு தடை ஏற்படுத்தப்படுகின்றது. இதனை நாம் சுட்டிக்காட்டினால் இனவாத முத்திரை குத்துகின்றனர்.
இராசமாணிக்கம் என்பவர் புலிகள் அமைப்பில் இருந்த ஒரு தலைவர். அவரின் மகன்தான் சாணக்கியன். நாட்டுக்குள் மீண்டும் தீ மூட்டும் வகையிலான செயல்களையே அவர் செய்துவருகின்றார்.
நாம் மோதலை விரும்பவில்லை. இனவாதத்தை தூண்டவும் முற்படவில்லை. இது அரசியல் கேம் என்பது எமக்கு தெரியும். வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பதவியை கைப்பற்றுவதே சாணக்கியனின் இலக்கு. ஆனால் அவர் மக்கள் மத்தியில் ‘பெயில்’. அவர் மக்களுக்கு சேவை செய்வதில்லை.
அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சார்பாக சாணக்கியனுடன் இணைந்து சூழ்ச்சிகரமான திட்டங்களை கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் செயற்படுத்திவருகின்றார். அவருக்கும் மக்கள் ஆதரவு இல்லை.” – என்றார்.










