ஹமாஸுடன் மலேசியா தனது உறவுகளைப் பேணுவதாகவும், அந்தக் குழுவை மலேசியா தண்டிக்காது என்றும் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார்.
பாலஸ்தீன பிரச்சினையை மலேசியர்கள் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் அன்வர் இப்ராஹிம் கடந்த செவ்வாய் அன்று பாராளுமன்றத்தில் கூறினார்.
ஹமாஸிற்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது தடை விதிக்கும் அமெரிக்காவின் சட்ட வரைவிற்கு பதிலளிக்கும்போது பிரதமர் அன்வர் இப்ராஹிம் இதனைத் தெரிவித்தார்.
நீண்ட காலமாக பாலத்தீனர்களுக்கான ஆதரவு பரவலாக இருக்கும் மலேசியா போன்ற ஒரு நாட்டில் இது அரசியல் ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத்தின் வெளிநாட்டு ஆதரவாளர்களுக்கு தடை விதிக்க கடந்த வாரம் அமெரிக்க பிரதிநிதிகள் சபை வாக்களித்ததை அடுத்து, ஒரு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மலேசிய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து அன்வர் இப்ராஹிமிடம் கேட்டிருந்தார்.
“இது உட்பட எந்த அச்சுறுத்தல்களையும் நான் ஏற்கமாட்டேன்… இந்த நடவடிக்கை ஒருதலைப்பட்சமானது மற்றும் செல்லுபடியாகாது. ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களாகிய நாங்கள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எடுக்கும் முடிவுகளை மட்டுமே அங்கீகரிக்கிறோம்,” என்று அன்வர் கூறினார்.