நாட்டில் தலைவிரித்தாடும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தி – அவற்றை முற்றாக தடுப்பதற்கு பொலிஸாருக்கு ஆறுமாத கால கெடுவை வழங்கியுள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்.
இந்த இலக்கை அடைவதற்கான பயணத்தின்போது எந்தவொரு அழுத்தங்களுக்கும் அடிபணிய வேண்டாம் எனவும், பொலிஸாருக்காக தான் முன்னின்று செயற்படுவார் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளுடன் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின்போதே அமைச்சர் டிரான் அலஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பொலிஸார் தமது கடமையை சரிவர நிறைவேற்ற வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக எனக்கென இலக்கொன்று உள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் நாட்டில் பாரியதொரு மாற்றத்தை பொலிஸார் ஏற்படுத்த வேண்டும். நாட்டில் குற்றச்செயல்களை தடுப்பது பிரதான இலக்கு. இந்த இலக்கை நோக்கி பயணிக்கும்போது எவராவது தடுக்க முற்பட்டால், தடைகளை தகர்த்துக்கொண்டு முன்னோக்கி செல்வதே எனது பழக்கம். பலம் வாய்ந்த நபராக இருந்தாலும் எனது அணுகுமுறை மாறாது.
எனவே, நாம் அனைவரும் இணைந்து இதனை செய்வோம். அச்சமின்றி பொலிஸார் பணியை ஆற்றுங்கள். உங்களுக்காக நான் முன்னிலையாவேன். எந்தவொரு தலையீடுகளுக்கும் இடமளிக்கப்போவதும் இல்லை. பொலிஸாருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் அது பற்றி என்னிடம் அல்லது பொலிஸாரிடம் தெரியப்படுத்துங்கள். அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டாம்.
ஜுன் 31 ஆம் திகதிக்குள் நாட்டில் அனைத்து மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் மாற்றமொன்று அவசியம். குற்றச்செயல்களை தடுப்பதற்கு மக்களும் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும்.” – என்றார்.










