நாட்டில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் தற்போது காணப்படுகின்ற தொடர் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவரும் அகில இலங்கை ஒன்றிணைந்த விசேட பொருளாதார நிலையத்தின் ஆலோசகருமான அருண சாந்த ஹெட்டியாராச்சி இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில் கூறியவை வருமாறு,
” வரலாறு காணாத வகையில் தற்போதைய மரக்கறி களின் விலைகள் உயர்ந்துள்ளன. கோவா ஒரு கிலோ 470 முதல் 490 ரூபா வரையிலும், கரட் ஒரு கிலோ 660 முதல் 680 ரூபா வரையிலும், பீட்ரூட் ஒரு கிலோ 350 முதல் 370 ரூபா வரையிலும், தக்காளி ஒரு கிலோ 400 முதல் 450 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன் போஞ்சி ஒரு கிலோ 600 முதல் 650 ரூபா வரையிலும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 1,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

இவ்வாறு இலங்கை வரலாற்றில் முதன் முறையாக மரக்கறிகளின் விலை அதிகளவிற்கு அதிகரித்த போதிலும் விவசாயிகளுக்கு எவ்வித இலாபமும் கிடைக்கவில்லை.
அதேநேரம் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு காரணமாக நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்து வருவதாகவும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நானுஓயா நிருபர்










