சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்து அரசின் பலத்தை காட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் பின்னர்,
“ சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதனை அரசு தோற்கடிக்குமா, அதற்கான பெறும்பான்மை பலம் உள்ளதா” என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
“ நம்பிக்கையில்லாப் பிரேரணை வருவது நல்லது. அரசின் பலத்தை காட்ட இது ஒரு சந்தர்ப்பம். அதனை விவாதத்திற்கு எடுத்து மிக விரைவில் வாக்கெடுப்புக்கு சென்றால் நாடாளுமன்றத்தில் தனது பலத்தை காட்ட முடியும்.” – எனவும் அவர் கூறினார்.
அதேவேளை பொதுஜன பெரமுன ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு முன்நிறுத்துமா என எழுப்பட்ட கேள்விக்கு,
“ பொதுஜன பெரமுன அல்ல, வேட்பாளர்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியாது. ரணில் விக்கிரமசிங்க அதைக் கேட்பாரா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது ரணில் விக்கிரமசிங்கவை இந்த நாட்டின் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் ஆக்கியது பொதுஜன பெரமுன தான். அவர் பணியை சரியாக செய்ததை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே, மொட்டுக் கட்சியாக ரணில் விக்கிரமசிங்க வந்தால் நல்லது என நினைக்கின்றேன். சுயேச்சை வேட்பாளராக வந்தால் இன்னும் நல்லது. அப்போது பயமின்றி தெளிவாக வேலை செய்யலாம்.” – என்றும் அமைச்சர் கூறினார்.
