உள்நாட்டு தொழில்துறையினரை வலுவூட்டி, அவர்களை ஏற்றுமதி சந்தைக்கு பிரவேசிக்கச் செய்வதன் மூலம் டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், முதலீடு செய்வதற்கும் சந்தையை வெல்வதற்கும் தயாராக இருப்பவர்களுக்கு அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இறப்பர் மற்றும் தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் துறையின் முன்னணி வர்த்தகர்களுடன் இன்று (26) முற்பகல் ஜனாதிபதிஅலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
உலகில் பல்வேறு நாடுகள் உள்நாட்டுத் தொழில்களை ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பதன் மூலமே பொருளாதார ரீதியாக வலுவடைந்துள்ளன என்பதை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதுள்ள வெளிநாட்டுக் கடன் சுமையிலிருந்தும் சர்வதேச நிதி நிறுவனங்களில் தங்கியிருப்பதிலிருந்தும் விடுபடுவதற்கான ஒரே வழி உள்நாட்டு உற்பத்தித் திறனை அதிகரிப்பதே என்றும் சுட்டிக்காட்டினார்.
உள்நாட்டுத் தொழில்துறையினர் ஏற்றுமதித் துறைக்குள் பிரவேசிப்பதை ஊக்குவிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இறப்பர் மற்றும் தேயிலைத் தொழில்துறையை மேம்படுத்துவதற்கும், ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கும் 2026-2030 தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்திற்கு இணங்க புதிய மூலோபாய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
உற்பத்தித் திறன் மற்றும் தரவுகளின் முக்கியத்துவத்தை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வருடாந்தம் அதிகரிக்கப்படும் உற்பத்தியின் அளவு குறித்து துல்லியமான புரிதலைக் கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.
உற்பத்தி செயல்முறையானது மிகவும் எளிமையானதாகவும் அதே நேரத்தில் செயற்திறனானதாகவும் இருக்க வேண்டும் என்றும், அதில் தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிவதற்குத் தேவையான அனைத்து தரவுகளையும் அரசாங்கத்திற்கு வழங்குமாறும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
குறிப்பாக, உரம் மற்றும் ஏனைய உள்ளீடுகளை வழங்கும் போது, அவற்றின் விளைவுகளுக்கும் ஏற்றுமதி வருமானத்திற்கும் இடையே உள்ள தொடர்பை விஞ்ஞான ரீதியாக ஆராய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
உள்நாட்டு கைத்தொழிலாளர்களை ஊக்குவிக்கும் போது, நிகர டொலர் வருமானத்தை அதிகரிப்பதில் முதன்மையான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், ஏற்றுமதிக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்குச் செலவிடப்படும் டொலரின் அளவுக்கும், உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டிற்கு மீண்டும் கிடைக்கும் டொலரின் அளவுக்கும் இடையிலான இடைவெளியை சரியாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்றும், மூலப்பொருட்களைக் கொண்டு வருவதற்காக பெருமளவிலான டொலர்கள் நாட்டிலிருந்து வெளியே சென்ற போதிலும், ஏற்றுமதி வருமானமாக நாட்டிற்குத் மீண்டும் கிடைக்கும் நிகர இலாபம் போதுமானதாக இல்லாவிட்டால் அதுவொரு பிரச்சினையாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இறப்பர் துறை நாட்டிற்கு பெருமளவிலான டொலர்களை ஈட்டித்தரக்கூடிய ஒரு வழியாக இருந்தபோதிலும், தற்போது இந்நாட்டில் தேவையின் 50% மாத்திரமே உற்பத்தி செய்யப்படுகிறது என்பதும் இங்கு குறிப்பிடப்பட்டது.
பெறுமதி சேர்க்கைகளுடன்கூடிய இறப்பர் கைத்தொழில் மூலம், ஏற்றுமதி வருமானத்தை 2030ஆம் ஆண்டளவில் சுமார் 03 பில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இறப்பர் பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்கு நிலப்பற்றாக்குறை மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவையே முதன்மையான தடைகளாக உள்ளன என்பது இங்கு தெரிவிக்கப்பட்டதுடன், அதற்கு தீர்வாக குறைந்த வருமானம் பெறுவோரை இப்பயிர்ச்செய்கைகளில் இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்நாட்டின் டயர் உற்பத்தித்திறன் உயர் மட்டத்தில் இருந்தபோதிலும், டயர் இறக்குமதி காரணமாக உள்நாட்டுத் தொழில்துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், மூலப்பொருள் தட்டுப்பாடு மற்றும் சில சட்டரீதியான தடைகள் காரணமாக உள்நாட்டு தொழிற்துறையினரிடமிருந்து அதிகபட்ச பங்களிப்பு கிடைக்கப் பெறாமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.
களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை போன்ற பாரம்பரிய பிரதேசங்களுக்கு மேலதிகமாக மொனராகலை மற்றும் ஊவா வெல்லஸ்ஸ போன்ற பிரதேசங்களில் இறப்பர் பயிர்ச்செய்கையை மேலும் விரிவுபடுத்துவது மற்றும் ஒரு ஹெக்டேயருக்கான விளைச்சலை அதிகரிப்பதன் மூலம் இறப்பர் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கும், அதன் மூலம் அவர்களை இப்பயிர்ச்செய்கையில் தக்கவைத்துக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், இறப்பர் ஆராய்ச்சி நிறுவனங்களினால் அறிமுகப்படுத்தப்படும் புதிய வழிமுறைகளை தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப விரைவாக நடைமுறைப்படுத்துவது, இறப்பர் பயிர்ச்செய்கை நிலங்களை பாம் ஒயில் பயிர்ச்செய்கைக்கோ அல்லது வேறு தேவைகளுக்கோ பயன்படுத்துவதற்குப் பதிலாக, விஞ்ஞான பூர்வமான முறைகளின் ஊடாக இறப்பர் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
ஈரான் சந்தை மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை காரணமாக தேயிலை ஏற்றுமதிக்காக எடுக்கும் காலமும் செலவும் அதிகரித்துள்ளதாக இங்கு தேயிலை ஏற்றுமதியாளர்கள் சுட்டிக்காட்டினர்.
இலங்கையின் தேயிலைக்கு ஈரான் மிகவும் முக்கியமானதொரு சந்தையாகும் என்பதுடன், ஈரானுடன் நிலவும் “தேயிலைக்குப் பதிலாக எண்ணெய்” (Oil for Tea) பண்டமாற்று ஒப்பந்தத்தின் கீழ் காணப்படும் நிதிச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஊடாக தலையிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இலங்கையின் தேயிலை உற்பத்தியாளர்களில் பெரும் பங்கைக் கொண்டுள்ள 480,000 இற்கும் அதிகமான சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக கன்றுகள் மற்றும் உரங்களுக்கான மானியங்களை வழங்க வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் முதன்மையான பிரச்சினைகளில் ஒன்றான வற் வரி நன்மைகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், நிதி அமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இணைந்து பயிற்சி நெறிகளை நடாத்தி ஏற்றுமதியாளர்களுக்கு மேலும் விழிப்புணர்வூட்டி, அவர்களின் பணிகளை இலகுபடுத்தி, அது தொடர்பான தடைகளை நீக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
தத்தமது துறைகளில் உள்ள பணிகளை முன்னெடுத்துச் செல்லும்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் நேரடியாகக் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளித்தமைக்காக இங்கு நன்றியைத் தெரிவித்த வர்த்தகர்கள், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் உபமாலி பிரேமதிலக, பிரதி ஆணையாளர் நாயகம் ஜே.எம்.எஸ்.எஸ். ரத்னவர்தன, ஆணையாளர் எஸ்.ஏ.பி.டி. திஸாபண்டார, சுங்கப் பணிப்பாளர் எஸ்.டி. அபேசேகர, சுங்க சிரேஷ்ட பிரதிப் பணிப்பாளர் ஜி.ஜி. சேனாரத்ன, ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க ஆகியோருடன் தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் Huzefa Akbarally உள்ளிட்ட இத்துறை சார்ந்த முன்னணி வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.










