மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா, இன்று காலை கோலாகலமாகக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

அதிகாலை முதலே முருகப்பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் மற்றும் வசந்த மண்டபப் பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, விநாயகப் பெருமான், சிவன் – உமாதேவியார் மற்றும் வள்ளி – தெய்வானை சமேதராக முருகப்பெருமான் வசந்த மண்டபத்திலிருந்து கொடித் தம்பத்திற்கு எழுந்தருளினர். பின்னர், மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓதப்பட, பக்தர்களின் ‘அரோகரா’ கோஷங்களுக்கு மத்தியில் ஆலயக் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் ஆரம்ப நிகழ்வான இன்றைய கொடியேற்றத் திருவிழாவில், நாட்டின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர் தேசங்களில் இருந்தும் வருகை தந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அருள்பெற்றனர்.

25 நாள்கள் நடைபெறவுள்ள இந்த ஆலய மகோற்சவப் பெருவிழாவில், எதிர்வரும் ஆகஸ்ட் 11ஆம் திகதி தேர்த் திருவிழாவும், ஆகஸ்ட் 12ஆம் திகதி ஆடி அமாவாசை தினத்தன்று கீரிமலை புனித தீர்த்தத்தில் தீர்த்தோற்சவமும் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles