எல்லா இன மக்களின் ஆதரவையும் பெற்ற ஜனாதிபதியும், 159 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றப் பெரும்பான்மையும் அரசிடம் உள்ளது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார். ஆனால், இந்த அரசிடம் சாப்பிட மட்டும்தான் வாய் திறக்கும், அரச தமிழ் பேசும் எம்.பிக்கள் உள்ளனர் என்றும் என்றும் அவர் கடுமையாகச் சாட்டினார்.
அமைச்சரவை, பிரதமர், சுகாதார அமைச்சர் மற்றும் தமிழ் பேசும் அமைச்சர்கள், எம்.பிக்கள் அனைவரும் இணைந்ததுதான் அரசு என்றும், இந்த அதிகாரத்தைப் பயன்படுத்திப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறுவது ஏன் என்றும் அவர் ஊடகங்களிடம் கேள்வி எழுப்பினார்.
சுகாதார அமைச்சர் நினைத்தால் ஒரே நாளில் முடிக்க வேண்டிய கல்முனை வைத்தியசாலை சீருடைப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல், சுமார் 10 நாள்களாகக் காலம் தாழ்த்திவிட்டுப் பின்னர் தற்காலிக தீர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சி முஸ்லிம் எம்பிக்கள் அமைச்சரைச் சந்தித்த போதிலும், ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசின் தமிழ், முஸ்லிம் எம்பிக்கள் இதுவரை என்ன செய்தார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
வெளியில் ஈழத்து, மலையக, முஸ்லிம் மக்களிடம் வெறும் வாய்ச் சவடால் அடிக்கும் தமிழ் பேசும் அரச அமைச்சர்களும் எம்.பிக்களும், உள்ளே செல்லும்போது எதற்காகவும் வாய் திறப்பதில்லை என்பதும், அதிகார மையத்துக்கு அருகில் அவர்கள் எவருமில்லை என்பதும் மீண்டும் நிரூபணமாகியுள்ளது என்பதும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், “நாம் இலங்கையர்” என்ற வெற்றுச் சமத்துவக் கோஷத்தை விமர்சித்துள்ள அவர், எல்லோருக்கும் அதிகாரம் இருந்தால் மட்டுமே உண்மையான சமத்துவம் சாத்தியமாகும் என்றும் தெரிவித்தார்.
தான் அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சரவையில் குரல் கொடுத்தமையையும், மேசையில் அடித்துப் போராடியதையும் அவர் இதன்போது நினைவு கூர்ந்தார்.










