மலையகத்தில் தொடர்ந்து நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக, பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெர்க்கஸ்வோல்ட் மேல் பிரிவுத் தோட்டத்தில் 20 வீடுகள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.08.2026) இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக, காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் கால்வாய் ஒன்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இன்று (03) அதிகாலை 3.00 மணியளவில் வெள்ள நீர் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளநீர் வடியாமல் உள்ளதாகவும், வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் வீட்டு உபகரணங்கள் அனைத்தும் நனைந்து சேதமடைந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, சில குடியிருப்புகளின் பின்பகுதியில் மண்மேடுகள் சரிந்து விழுந்ததில் வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன், கெர்க்கஸ்வோல்ட் தோட்டப் பகுதிக்குச் செல்லும் பிரதான வீதியில் சுமார் மூன்றரை அடி உயரத்திற்கு வெள்ளநீர் நிரம்பியுள்ளதால், அவ்வீதியூடான போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.
மேலும், இந்த வெள்ளப் பெருக்கினால் பகுதியில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்களும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் மக்களின் விவரங்கள் கிராம உத்தியோகத்தர் ஊடாகச் சேகரிக்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காக நோர்வுட் பிரதேச செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் தெரிவித்தார்.
– பொகவந்தலாவ நிருபர் எஸ். சதீஸ்











