இறக்குமதி செய்யப்பட்ட குளிரூட்டப்பட்ட சேமிப்புப் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 36 லட்சம் சிகரெட்டுகள் அடங்கிய தொகுதியொன்றை இலங்கைச் சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். அண்மைக் காலத்தில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய சிகரெட் கடத்தல் முயற்சிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
சர்வதேச பங்காளர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், இலங்கை சுங்கப்பிரிவின் மத்திய புலனாய்வுப் பணிப்பகத்தினால் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டது.
சுங்கப்பிரிவினரின் தகவல்படி, ‘குளிரூட்டப்பட்ட சேமிப்புப் பலகைகள்’ எனப் பிரகடனப்படுத்தப்பட்டு, தெஹிவளையை தளமாகக் கொண்ட நிறுவனமொன்றிற்காக இந்த சரக்குத் தொகுதி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
சோதனையின் போது, அந்தப் பலகைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18,000 இற்கும் அதிகமான சிகரெட் கார்டன்களை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இலங்கையில் வசிக்கும் அல்லது பணிபுரியும் சில சீனப் பிரஜைகளுக்கு இந்தக் கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்பு இருக்கலாம் என சுங்கப்பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த சரக்குத் தொகுதி உள்ளூர் சந்தைக்குள் நுழைந்திருந்தால், அரசாங்கத்திற்கு 400 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வரி வருமான இழப்பு ஏற்பட்டிருக்கும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் சந்தைப் பெறுமதி 450 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
