ஆசிரியர்கள் இன்மையால் கல்வி நடவடிக்கை பாதிப்பு: கல்வி திணைக்களத்திற்கு மகஜர்
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோல்புறூக் கோட்டம் 03 இன் கீழ் இயங்கும் பல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக டயகம இலக்கம் 01 தமிழ் வித்தியாலயத்தில் கடந்த ஒரு மாத காலமாக தரம் 04 மாணவர்களுக்கான நிரந்தர வகுப்பாசிரியர் ஒருவர் நியமிக்கப்படாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மாணவர்களின் தினசரி கற்றல் நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்களின் எதிர்கால கல்வி முன்னேற்றமும் கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும், தற்போது தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்காக மாணவர்களை தயார்படுத்த வேண்டிய மிக முக்கியமான காலப்பகுதியாக இருந்தபோதிலும், ஆசிரியர் இல்லாமல் வகுப்புகள் நடைபெறுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாக பெற்றோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பில் பெற்றோர் பலமுறை பாடசாலை அதிபருடன் கலந்துரையாடியுள்ளதாகவும், முன்னர் கடமையாற்றிய ஆசிரியை இடமாற்றம் பெற்று வேறு பாடசாலைக்கு சென்ற பின்னரும், அவருக்குப் பதிலாக புதிய ஆசிரியர் ஒருவரை நுவரெலியா கோட்ட கல்வி அலுவலகம் இதுவரை நியமிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, சில பாடசாலைகளில் தேவைக்கு அதிகமான ஆசிரியர்கள் பணியாற்றும் நிலையிலும், ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் பாடசாலைகளுக்கு உரிய முறையில் இடமாற்றங்கள் வழங்கப்படாதது கல்வி சமத்துவத்தை பாதிக்கும் செயல் என பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனையடுத்து, தமது பிள்ளைகளின் கல்வியை பாதுகாக்கும் நோக்கில் குறித்த பாடசாலையின் பெற்றோர்கள் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட மகஜர் ஒன்றை நுவரெலியா வலய கல்வி பணிமனைக்கு பதிவு தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
எனவே, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மேலும் பாதிக்கப்படாமல் இருக்க உடனடியாக தகுதியான ஆசிரியர் ஒருவரை நியமிக்க கல்வி அதிகாரிகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்










