அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாகச் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதனை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
“அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச்சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து, உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் (தீர்ப்பு) மூன்று வாரங்களுக்குள் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும்.
உயர்நீதிமன்றம் வழங்கும் வழிகாட்டல்களுக்கு அமையச் செயல்பட அரசாங்கம் முழுமையாகத் தயாராக உள்ளது. சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய எந்தவொரு சரத்திலும் அரசாங்கம் மாற்றம் செய்யவில்லை. எனவே, சர்வஜன வாக்கெடுப்புக்கான சூழல் உருவாகாது என்றே நாங்கள் நம்புகின்றோம்.
எனினும், ஒருவேளை சர்வஜன வாக்கெடுப்பு அவசியமானது என உயர்நீதிமன்றம் கருதினால், அதனை நடத்துவதற்கும் அரசாங்கம் தயக்கமின்றித் தயாராகவே உள்ளது.”என்றார் நளிந்த ஜயதிஸ்ஸ .










