‘மக்களின் காணிகள் மக்களுக்கே’ என்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உறுதிமொழிக்குச் செயலுரு வழங்கும் வகையில், பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைந்து விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்தார்.
வடக்கு மாகாணத்துக்கு இரு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புப் பிரதி அமைச்சர், இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர், நேற்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, இன்று (26.05.2026) செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் களப்பயணம் மேற்கொண்டு காணி விடுவிப்புத் தொடர்பான நேரடி ஆய்வுகளை முன்னெடுத்தனர்.
இந்த ஆய்வுகளின் பின்னர், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் காணி விடுவிப்புத் தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் அமைச்சருமான இ.சந்திரசேகர், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் கௌரவ பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர ஆகியோர் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர். இவர்களுடன் இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி உள்ளிட்ட இராணுவ உயர் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் உரையாற்றிய கௌரவ ஆளுநர், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் வழங்கிய ‘மக்களின் காணிகள் மக்களுக்கே’ என்ற உறுதிமொழிக்குச் செயலுரு கொடுக்க வேண்டியது அதிகாரிகளாகிய அனைவரினதும் பொறுப்பாகும் என வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் இ.சந்திரசேகர், காணி விடுவிப்புத் தொடர்பில் மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன் உள்ளதாகவும், எனவே விடுவிக்கக்கூடிய காணிகளை விரைந்து விடுவிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, ‘படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு மிகவும் தீவிரமான அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது. படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்பதிலும், படையினர் வசமுள்ள ஆனால் பயன்படுத்தப்படாத காணிகளை விடுவிக்க வேண்டும் என்பதிலும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் மிகத் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளார்’ எனத் தெரிவித்தார்.
மேலும், ‘காணிகளை விடுவிப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, முப்படைகளின் தளபதிகள், கௌரவ அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் மற்றும் உரிய அதிகாரிகளுடன் இணைந்து குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு நேரடியாகக் களப்பயணம் மேற்கொண்டோம்.
இதன்போது பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் கோரும் குறிப்பிட்ட சில காணிகளின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய முக்கியத்துவங்கள் குறித்து நேரில் ஆராயப்பட்டது. இந்தத் தகவல்கள் மற்றும் கள ஆய்வுகளின் முடிவுகள் அனைத்தும் கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, ஜனாதிபதி தலைமையிலான தேசிய பாதுகாப்புச் சபையிலும், நாடாளுமன்றப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவிலும் சமர்ப்பிக்கப்பட்டு விரிவாக ஆராயப்படும். தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் காணிகளை விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். எவ்வாறாயினும், சில அதிமுக்கியமான பகுதிகளில் தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்’ எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ‘சில குறிப்பிட்ட காணிகளை விடுவிப்பதானது சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தீர்மானங்களிலேயே தங்கியுள்ளது. எனவே, அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர், துறைசார் செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகளை உள்ளடக்கிய விசேட உயர்மட்டக் கூட்டமொன்று மிக விரைவில் ஏற்பாடு செய்யப்படும்’ எனவும் பிரதி அமைச்சர் உறுதியளித்தார்.
இதன் பின்னர் இடம்பெற்ற திறந்த கலந்துரையாடலில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர்கள் தமது நிலைப்பாடுகளைத் தெளிவாக முன்வைத்தனர்.
அத்துடன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோரும் தமது துறைசார்ந்த காணிகளின் விடுவிப்புத் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தனர். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரால் யாழ். மாவட்டக் காணி விடுவிப்புத் தொடர்பான பல்வேறு தரவுகள் சபையின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டன.
குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட வேண்டிய வீதிகள், வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பல இடங்கள் தொடர்பில் பெயர் குறிப்பிட்டுக் கலந்துரையாடப்பட்டது. அவற்றில் உடனடியாக விடுவிக்கக்கூடிய காணிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், தேசிய பாதுகாப்புச் சபையில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் குறிப்பெடுத்துக்கொண்டார்.
வலிகாமம் வடக்கு பகுதியில் 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி ஊடாக உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகளின் அவசியம் வலியுறுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு அமைச்சு அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இராணுவத் தளபதி சபையில் அறிவித்தார்.
இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மேலதிக மாவட்டச் செயலாளர்கள், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.










