போருக்கு மத்தியில் நடந்த போராட்டம் – தோல்வியின்றி வெளியேறியது ஈரான்

உலகக் கோப்பையின் நாக்கவுட் (Knockout) சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்ற நீண்ட நாள் கனவை ஈரான் தேசிய கால்பந்து அணி இந்த முறையும் நனவாக்கத் தவறிவிட்டது.

போர்ச் சூழலுக்கு மத்தியில் நடைபெறும் இந்த 2026 உலகக் கோப்பைத் தொடரானது, நாட்டிற்குள்ளும் வெளியேயும் வாழும் ஈரான் மக்களிடையே வெவ்வேறான காரணங்களால் பலவிதமான உணர்ச்சிப் போராட்டங்களை ஏற்படுத்தியுள்ளது.

குரூப் G பிரிவில் இடம்பெற்றிருந்த ஈரான் அணி , வெள்ளிக்கிழமை சீட்டல் (Seattle) நகரில் எகிப்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியை 1-1 என சமநிலையில் முடித்தது.

இதன் மூலம் ஆடிய மூன்று போட்டிகளையும் சமநிலையில் செய்து, வெறும் 3 புள்ளிகளுடன் தனது குரூப்பில் மூன்றாவது இடத்தைப் பிடித்து, உலகக் கோப்பையில் தனது ஏழாவது பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது ஈரான்.

FIFA) இந்த முறை அணிகளின் எண்ணிக்கையை 32லிருந்து 48 ஆக உயர்த்தியதால், குரூப்களில் மூன்றாவது இடம் பிடிக்கும் சிறந்த 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது.

ஆனால், சனிக்கிழமை நடந்த மற்ற போட்டிகளின் முடிவுகள் ஈரான் அணிக்குச் சாதகமாக அமையாததால், வெறும் ஒரு இட வித்தியாசத்தில் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது.

எகிப்துக்கு எதிரான போட்டியின் 93-வது நிமிடத்தில், சென்டர்-பேக் வீரர் ஷோஜா கலில்சாதே (Shoja Khalilzadeh) ஒரு கோல் அடித்து ஈரானை 32 அணிகள் பங்கேற்கும் அடுத்த சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற வைப்பது போல் தெரிந்தது.

ஆனால், விஏஆர் (VAR) சோதனையில் அவரது வலது காலின் சில சென்டிமீட்டர்கள் ஆப்சைட் (Offside) எனத் தெரிந்ததால் அந்த கோல் மறுக்கப்பட்டது.

மேலும், ஈரானின் ராணுவ மற்றும் அரசியல் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் (IRGC) தொடர்பு இருப்பதாகக் கூறி, ஈரான் கால்பந்து கூட்டமைப்பு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அமெரிக்காவிற்குப் பயணிப்பதற்கான விசாக்கள் மறுக்கப்பட்டன.

கால்பந்து வீரர்கள் கூட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அரிசோனாவில் உள்ள தங்களுக்கு ஒதுக்கப்பட்ட டூஸான் (Tucson) பகுதிக்கு பதிலாக, மெக்சிகோவின் டிஜுவானா (Tijuana) பகுதியிலேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது.

போட்டி நடப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்புதான் அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய வேண்டும், போட்டி முடிந்த அன்றே வெளியேற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. சீட்டல் நகரில் நடந்த போட்டிக்கு மட்டும் இரண்டு நாட்களுக்கு முன்பு வர அனுமதி வழங்கப்பட்டது.

Related Articles

Latest Articles